விஜய் தன்னை பாஜவின் எதிரி என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவர் எங்கள் பிடியில் இருப்பதாக சொல்வது சரியில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ” மணிப்பூர், கும்பமேளா போன்ற இடங்களுக்கு பாஜக உண்மை கண்டறியும் குழு ஏன் செல்லவில்லை என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கும்பமேளா சம்பவம் எப்படி நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். கும்பமேளாவிற்கு 64 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வந்தார்கள். கரூர் விவகாரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளளர். சிறிய குழந்தைகள் முதல் பெண்கள் என இறந்துள்ளனர். தவெக கேட்ட இடத்தில் ஏன் அனுமதி கொடுக்கவில்லை? போலீஸ் தடியடி செய்வதற்கு அவசியம் என்ன? செருப்பை யார் தூக்கி அடித்தது? முதலமைச்சர் வரும் போது மட்டும் ஏன் ரவுண்டானா போன்ற பெரிய இடங்களில் அனுமதி கொடுக்கிறார்கள்? இதையெல்லாம் அவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
கரூர் சம்பவம் குறித்து தனிநபர் ஆணையம் விசாரணை செய்து கொண்டிருக்கும் போது, அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பது நிச்சயமாக தவறு. பாஜக எங்களுடைய எதிரி என்று விஜய் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் எப்படி விஜய், பாஜக கைப்பிடியில் இருக்கிறார் என்று சொல்ல முடியும்? கரூர் விவகாரத்தில் பாஜக உண்மை கண்டறியும் குழு என்ன எழுதிக்கொடுத்து இக்கிறார்கள் என்று தெரிந்த பின்னரே தெரியும்” என்றார்.
திருவண்ணாமலையில் போலீஸாரே பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்ற கேள்விக்கு, ” இது ஏதோ இன்றைக்கு, நேற்று நடக்கும் சம்பவம் அல்ல. திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து வேலியே பயிரை மேய்ந்தார் போல, காவல்துறையில் இதுபோன்றவர்கள் தமிழகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்னும் அவர்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது” என்று பதில் அளித்தார்.


