பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அவாமி அதிரடி குழு தலைமையிலான போராட்டத்தில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாடு பிரிவினையின்போது, ஜம்மு – காஷ்மீரின் ஒரு பகுதியை உரிமம் கொண்டாடி, நம் அண்டை நாடான பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. அந்த நாடு ஆக்கிரமித்துள்ள பகுதியை மீட்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களும், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவுடன் இணைவதற்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதை வலியுறுத்தி, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அடிக்கடி போராட்டங்கள் நடந்து வருகின்றன.
கடந்த வாரம் கைபர் பக்துன்க்வாவில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அவாமி குழு தலைமையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாதில், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரமாக வெடித்துள்ளது. இதனால், அங்குள்ள சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிகங்கள் முழுமையாக மூடப்பட்டன,
அத்துடன் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. அப்போது நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவாமி அதிரடி குழு தலைமையிலான போராட்டங்கள், கடந்த 72 மணி நேரமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை முடக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


