நடக்கக்கூடாதது நடந்து விட்டது என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்
கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 51 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் தவெக சார்பில் முறையிடப்பட்டுள்ளது. அதே போல தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய தடை விதிக்குமாறு ஒரு தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இந்த நிலையில் கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” என் வாழ்க்கையில் இப்படி ஒரு வலி மிகுந்த நேரத்தை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. மனது முழுக்க வலி. கரூரில் தவெக எந்த தவறும் செய்யவில்லை.தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். என்னை பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் இருப்பேன். .
இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம். இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம். எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும். என்னுடைய வலிகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், மற்ற கட்சி தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன். கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை. சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி. விரைவில் அனைத்து உண்மையும் வெளிவரும். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.


