கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், மியான்மர் கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அங்கு ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும். மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் அக்டோபர் 1-ம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தெற்கு, மத்திய, வடக்கு மற்றும் அந்தமான் அருகே, வங்கக்கடலில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு, மணிக்கு 45 முதல் 55 கி.மீ, வேகத்திலும், இடையிடையே, மணிக்கு, 65 கி.மீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.


