
உத்தரப்பிரதேசத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆயுதம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை எஸ்டிஎஃப் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 கைத்துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் ஒரு கும்பல், மாநிலங்களுக்கு இடையே ஆயுதங்களைக் கடத்துவதாக உத்தரப்பிரதேச சிறப்புப் படையினருக்கு (எஸ்டிஎஃப்) தகவல் கிடைத்தது. இதையடுத்து பாராபங்கியின் சிறப்புப் படைப்பிரிவு இன்ஸ்பெக்டர் வினோத் உபாத்யா தலைமையில் அந்த கும்பலை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஃப்ரினிகர் ரிங் சாலையில் வாகனங்களில் வந்தவர்களைச் சோதனை செய்த போது ஒரு வாகனத்தில் 10 கைத்துப்பாக்கிகள் மற்றும் 15 தோட்டாக்களுடன் மூன்று பேர் இருந்தனர். அவர்களை எஸ்டிஎஃப் படை சுற்றி வளைத்து கைது செய்தது. அவர்கள் மாநிலங்களுக்கு இடையே ஆயுதம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
சட்டவிரோதமாக ஆயுதக்கடத்தலில் ஈடுபட்ட அவர்கள் மூன்று பேரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 10 கைத்துப்பாக்கிகள் மற்றும் 15 தோட்டாக்கள்,
மூன்று செல்போன்கள், 1700 ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் கோண்டாவில் உள்ள சுனிஹ் குன்ஸ்லரைச் சேர்ந்த பிரகார் ராய் என்ற திரு, கங்கௌலியைச் சேர்ந்த ராகுல் தாக்கூர், கோண்டாவில் உள்ள குர்லேசிபூரைச் சேர்ந்த முதுன் பிரதான் என்று தெரிய வந்தது.
இந்த கும்பலை சேர்ந்த பிரகார் ராய், மாலேதிஹா கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் சப்ளையர் லட்சுமிகாந்த் பாசியிடமிருடந்து 32 கைத்துப்பாக்கிகளைப் பெற்றதாக விசாரணையில் தெரிய வந்தது. அப்படி வாங்கிய துப்பாக்கிகளில் இருபதை அவரது கூட்டாளிகள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் உத்தரப்பிரதேசம் மற்றும் அண்டை மாநிலமான பிஹாரில் விற்பனை செய்தது தெரிய வந்தது. ஒரு துப்பாக்கியை 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மூவர் மீதும் மஜ்ராய்பால் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் மற்றும் ஆயுதச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்கும்பலுக்கு யார், யாருடன் தொடர்பு இருக்கிறது என்று விசாரணை நடைபெற்று வருகிறது.