
மதுரை அருகே அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் படித்த மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்திய மூன்று மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் ‘அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் அருகிலுள்ள அரசு கள்ளர் மாணவர் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி விடுதியில் தங்கியிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவனை மற்ற மாணவர்கள் தாக்கி நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்து வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்9பாக பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று மாணவர்கள் மீது செக்கானூரணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த மூன்று மாணவர்களையும் இடைநீக்கம் செய்து அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி முதல்வர் அசோகன் உத்தரவிட்டுள்ளார். மேலும் கவனக்குறைவாக இருந்ததாக விடுதிக் காப்பாளர் பாலமுருகனை கள்ளர் சீரமைப்புத்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட விடுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.