
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 20) சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 82,320 ரூபாயாக புதிய உச்சம் தொட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த 16ம் தேதி ஒரு சவரன் 82 ஆயிரம் ரூபாயைத் தாண்டி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதன் பிறகும் விலை உயருமோ என நினைத்த நேரத்தில், கடந்த சில நாட்களாக சற்று குறைந்து காணப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாயும் உயர்ந்து, ஒரு கிராம் 10 ஆயிரத்து 230 ரூபாய்க்கும், ஒரு சவரன் 81 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.82 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளது. இதன்படி சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ,82,320 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போன்று 24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 66 ரூபாய் உயர்ந்து.11,226 ரூபாய்க்கும், ஒரு சவரன் 528 ரூபாய் உயர்ந்து, 89,808 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் 143 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.