
சென்னை, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று (செப்டம்பர் 19) இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். அதேபோல், சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர், அலுவலகத்தில் உள்ள பணியாளர்களை வெளியேற்றிவிட்டு, சோதனை நடத்தப்பட்டது. சந்தேகப்படும் வகையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் எந்த பொருட்களும் சிக்கவில்லை. இதனால் மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஏற்கெனவே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல் கடந்த வாரம் சென்னை மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல மும்பை உயர்நீதிமன்றத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை போலீஸார் கூறுகையில், மும்பை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உயர் நீதிமன்ற வளாகத்தை சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை என்றனர்.
இந்தியா முழுவதும் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.