
நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். அத்துடன் இந்தியப் பிரதமருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு உள்ளது என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அப்போது அரசர் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலியாவை விண்ட்சர் அரண்மனையில் அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் உடனிருந்தார். இதன் பின் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இணைந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். நான் இந்தியப் பிரதமருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு உள்ளது. சமீபத்தில் தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தேன். அதற்கு நன்றி தெரிவித்து மோடி ஒரு அழகான அறிக்கை வெளியிட்டுள்ளார். எங்களுக்கு மிகவும் நல்ல உறவு உள்ளது” என்றார்.
இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்கா விதித்த தடைகளை டிரம்ப் நியாயப்படுத்தினார். ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவுக்கும் இதே போன்ற தடைகள் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ரஷ்யா, உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து டிரம்ப் பேசுகையில், “மிக எளிமையாகச் சொன்னால், எண்ணெய் விலை குறைந்தால், புதின் வெளியேறப் போகிறார். அவருக்கு வேறு வழியில்லை. அவர் அந்தப் போரிலிருந்து விலகப் போகிறார்” என்று கூறிய டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்னையை தான் தீர்த்ததாக மீண்டும் தெரிவித்தார். இதற்கிடையே டிரம்ப்பின் இந்த பயணத்தின்போது அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.