
திமுக அரசை போட்டி போட்டு பாராட்டிய பாமக எம்எல்ஏக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கினார்.
இதன் பின் அவர் விழாவில் பேசுகையில், இந்த விழாவிற்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர். அவர்கள் நம்முடைய இயக்கம் கிடையாது. நம்முடைய கூட்டணியில் கூட (இப்போது) கிடையாது. சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருண், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகிய இருவரும், சேலம் மாவட்டத்திற்கு திமுக அரசு பல்வேறு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. அதற்குப் பாராட்டுகள் என போட்டி போட்டு கொண்டு பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் ஒற்றுமையாக பாராட்டியிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மக்கள் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.