
இந்தியா, ரஷ்யா இடையே உள்ள உறவுகளைத் தொந்தரவு செய்யும் எந்த ஒரு முயற்சியும் தோல்வியடையும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் வாயிலாக, உக்ரைனுக்கு எதிரான அந்நாட்டின் போருக்கு நிதியுதவி வழங்குவதாக, இந்தியா மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்காவின் 25 சதவீத வரி மீது, கூடுதலாக 25 சதவீதம் அபராத வரி விதிக்கப்பட்டது.
இது நியாயமற்றது என தெரிவித்துள்ள இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பயந்து, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது நிறுத்தப்படாது என்றும், நாட்டு நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து வாங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், இந்தியா- ரஷ்யா இடையேயான உறவில் விரிசல் உண்டாக்க அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார்.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் நேட்டோவின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் இந்தியா உறுதியாக இருக்கிறது.
இந்தியா- ரஷ்யா இடையே உறவுகளைத் தொந்தரவு செய்யும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும். இந்தியாவுக்கு, ரஷ்யாவுக்கு இடையிலான உறவுகள் முன்னேற்றம் கண்டு வருகிறது. நீண்டகால ரஷ்யா-இந்தியா நட்பு கலாசாரம் உட்பட பல்வேறு விஷயங்களில் வேரூன்றியுள்ளது. தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.