
அவசரகால அதிகாரங்களின் கீழ் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் , பல்வேறு நாடுகளுக்கு அளவிற்கு அதிகமான வரிகளை விதித்துள்ளார். இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்துள்ளார். இந்த வரி உயர்வுக்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் டிரம்ப் விதித்த வரி உயர்விற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி உயர்விற்கு அந்த நாட்டு நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், அவசரகால அதிகாரங்களின் கீழ் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று பரபரப்பு தீர்ப்பளித்து உள்ளது. அத்துடன் வரி விதிப்புகளை டொனால்ட் டிரம்ப் நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் , இந்த ஆண்டு தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய சட்டத்தைப் போல வரிகளை விதிக்க அதிபருக்கு சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் அங்கீகாரம் அளிக்கவில்லை. தனது அதிகாரத்தை மீறி டிரம்ப் நிர்வாகம் வரிகளை விதித்துள்ளார் என்று கூறியுள்ளது.
இந்த தீர்ப்பை டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், உலக நாடுகள் மீது விதிக்கப்பட்ட அனைத்து வரிகளும் நடைமுறையில் இருக்கும். வரி விதிப்பு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் பாரபட்சமானது, தவறானது, ஆனால், இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும் என்பது அவர்களுக்குத் தெரியும். மேலும், இந்த வரிகள் நீக்கப்பட்டால், அது நாட்டிற்கு பெரும் பேரழிவாக இருக்கும். அது நம்மை நிதி ரீதியாக பலவீனப்படுத்தும். நாம் வலுவாக இருக்க வேண்டும். அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் உதவியுடன் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து போராடுவேன் என்று டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.