
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனரீதியாக எங்களை ஆதரிக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நெல்லையில் அவர் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறுகையில், ” பிஹாரில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். இதற்காக அவர் நடத்திய பேரணியில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது வருத்தம் அளிக்கிறது. யார் கூப்பிட்டாலும் பின்னால் சென்று விடலாமா? தமிழ்நாட்டின் பெருமையை நிலைநாட்ட வேண்டாமா? முதலில் பிஹாரில் என்ன நடந்தது என்பது குறித்து தனது உளவுத்துறை மூலம் முதலமைச்சர் விசாரித்து தெரிந்து கொண்டு அங்கு சென்றிருக்க வேண்டும்.
பிஹாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் 22 லட்சம் பேர் இறந்து போனவர்கள், 36 லட்சம் பேர் வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், 7 லட்சம் பேர் இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள். இறந்து போனவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ராகுல் காந்தி போராட்டம் நடத்தினால், அதற்கு நமது முதலமைச்சர் ஆதரவு தெரிவிக்கலாமா? இது என்ன நியாயம்? இதேபோல, முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான கொளத்தூரிலேயே சுமார் 10 ஆயிரம் போலி வாக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலில் அவர் அதை சரிசெய்ய வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு என்னை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் என் நண்பர்தான். நானும், அவரும் அம்மாவின் (ஜெயலலிதாவின்) அரசியல் பள்ளியில் ஒன்றாகப் பயின்றவர்கள். நான் அமைச்சராக இருந்தபோது அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்; இப்போது அவர் அமைச்சராக இருக்கும்போது நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். அவர் ஏன் அப்படிப் பேசினார் என்று தெரியவில்லை. ஒருவேளை, பயத்தில் அப்படிப் பேசியிருக்கலாம். பரவாயில்லை.
அதிமுகவை இன்னும் திராவிட இயக்கமாகவே பார்க்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். அப்படியானால், அவர் இருக்கும் கூட்டணியை விட்டுவிட்டு, ஜெயிக்கப் போகும் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டியதுதானே? சமீபத்தில் ஒரு காணொலியில் அவர், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளைப் பாராட்டிப் பேசியதை நான் பார்த்தேன். அவர் ஒரு நல்ல நண்பர். சில கருத்துக்களைத் தெளிவாகப் பேசுகிறார். ஆர்எஸ்எஸ் என்பது 100 ஆண்டுகளாக நாட்டுக்குச் சேவை செய்யும் ஒரு இயக்கம். திருமாவளவன் மனரீதியாக எங்களை ஆதரிக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். அவர் எங்கள் கூட்டணிக்கு வருவாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்றார்.