
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக.30-ம் தேதி ஜெர்மன் செல்கிறார்.
தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்த்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு துபாய், ஐக்கிய அரபு நாடுகளுக்கு 5 நாட்கள் பயணமாக மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது தமிழ்நாட்டுக்கு ரூ.6,100 கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதே ஆண்டில் சிங்கப்பூர், ஜப்பானில் முதல்வர் மேற்கொண்ட 9 நாள் பயணத்தில் ரூ.1,342 கோடி ஒப்பந்தங்களும், 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் ஸ்பெயினில் 9 நாள் பயணத்தின் போது ரூ.3,440 கோடி ஒப்பந்தங்களும், அதே ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் அமெரிக்காவில் மேற்கொண்ட 17 நாள் பயணத்தில் ரூ.7,616 கோடி ஒப்பந்தங்களும் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது. இந்தநிலையில் ஜெர்மன், லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆக.30-ம் தேதி ஜெர்மனிக்கு மு.க.ஸ்டாலின் பயணம் செய்கிறார். ஆக, 31-ம் ஜெர்மனியில் உள்ள அயலக அணி நிர்வாகிகளை சந்தித்துப் பேசுகிறார். செப்.1-ம் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டனுக்குப் பயணமாகிறார். செப்.2 அல்லது 3: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோரைச் சந்தித்து உரையாடுகிறார். செப்.4-ம் தேதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலகத் தமிழர் நல வாரியத்தின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
செப்.6-ம் தேதி லண்டனில் உள்ள தமிழர் நல வாரியத்தின் நிகழ்வுகளில் மு.க..ஸ்டாலின் பங்கேற்கிறார். செப். 7-ம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்டு செப். 8: அதிகாலையில் சென்னை வந்தடைகிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் முதலமைச்சரின் தொழில் முதலீடு ஈர்ப்பு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.