
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை(ஆகஸ்ட் 23) ஆவணித் திருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினந்தோறும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த விழாவின் 7-ம் நாளில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திக் கோலத்திலும், 8-ம் நாளில் சுவாமி சண்முகர் பச்சை சாத்திய கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட திருவிழா நாளை காலை 7-00 மணிக்குமேல் 7-30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளிய தேர் வெளிவீதி நான்கிலும் பவனி வருகிறது.