
கட்சியை ஆரம்பித்த உடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது கனவு என்று தவெக தலைவர் விஜய்யை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் முதல் வாரத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் எழுச்சி பயணத்தை மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல் விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார். அதை மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம், மாநாடு நடத்தலாம்; ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது.
அதிமுக குறித்த விஜய்யின் விமர்சன பேச்சுக்களை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக தொண்டர்கள் மனவேதனையுடன் உள்ளார்கள் என்பது விஜய்க்கு எப்படி தெரியும்? எந்த அறிமுக தொண்டரிடம் விஜய் பேசினார். யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் அதிமுக குறித்து விஜய் விமர்சனம் செய்து பேசியிருக்கலாம்.
விஜய்க்கு எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம், அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்கிறோம். அவரை விமர்சனம் செய்து விஜய் பேசினால் அது விஜய்க்கு தான் பின்னடைவாக மாறும். திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணி தான் சரியானது என தேசிய கட்சிகளுக்கு கூட தெரிந்துள்ளது.
அண்ணா, எம்.ஜி.ஆரை தவிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத காரணத்தால் விஜய் அண்ணாவையும், எம்ஜிஆர் குறித்தும் பேசுகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் ஆசான் யார் என்பது தெரியவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டாக விஜய் கைக்குழந்தையாக உள்ளார். கட்சியை ஆரம்பித்த உடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது கனவு. முதல் மாநாட்டில் திமுகவை பாயாசம் என்றார் விஜய்; இந்த மாநாட்டில் பாய்சன் என்கிறார்; அடுத்த மாநாட்டில் அமுது என்று பேசுவாரா?; என்ன பேசுவார் அவருக்குதான் தெரியும் என்றார்.