
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 4.86 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அன்றாடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அத்துடன் வெளிநாட்டு பக்தர்களும் திருப்பதி ஏழுமலையானை வழிபட வருகின்றனர். அப்படி திருப்பதி வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. நெய் மணக்க சுவையுடன் இருக்கும் திருப்பதி லட்டுவை அதிக அளவில் பக்தர்கள் வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 12-ம் தேதி தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்ததால் ஒரே நாளில் 4,86,134 லட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இந்த லட்டு விற்பனை மூலம் தேவஸ்தானத்திற்கு 2.43 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டு ஒரே நாளில் 3.24 லட்சம் லட்டுகள் விற்பனையானது.
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு 1 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 350 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 2 கோடியே 24 லட்சத்து 40 ஆயிரத்து 82 லட்டுகள் தயார் செய்யப்பட்டது. தற்போது பக்தர்களுக்கு வழங்குவதற்காக கூடுதலாக 4 லட்சம் லட்டுக்கள் இருப்பு வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.