
நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு.என்று தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு அவரது தாய் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்க உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் நேற்று நள்ளிரவு முதல் மதுரையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதனால் மதுரை நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு அவரது தாய் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “முதல் மாநாடு உன் பலத்தைக் காட்டியது.. மதுரை மாநாடு உன் படைபலத்தை காட்டுகிறது. திரையில் உன்னை பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி தங்கைகள் அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும்.
வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியை காட்டும், நீ அரியணை ஏறும் நாள் வரும்.. அது உன் தொண்டர்களின் திருநாள். தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்று காட்டு, நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு. உன்னோடு வரும் தொண்டர் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை, உன் வெற்றிக்கு வானமே எல்லை” என்று தெரிவித்துள்ளார்.