
டெல்லியில் இ-மெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
துவாரகாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு இ-மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும், பள்ளியில் தேடுதல் நடவடிக்கைகளுக்காக டெல்லி போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும், தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பள்ளி முழுவதும் வெடிகுண்டு இருக்கிறதா என தீவிரமாக சோதனை நடத்தினர். இதேபோல, துவாரகாவில் உள்ள மாடர்ன் கான்வென்ட் பள்ளி மற்றும், ஸ்ரீராம் வேர்ல்டு ஆகிய பள்ளிகளுக்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அனைவரும் வெளியேற்றப்பட்ட பின் பள்ளிகளில் வெடிகுண்டு சோதனை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகங்கள் சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதில், “அன்புள்ள பெற்றோர்களே, இன்று அதிகாலை எங்கள் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம், மேலும் வெடிகுண்டு தடுப்புப் படையினர் விசாரணைக்காகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
குழு தேடுதலை முடிக்கும் வரை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தின் மேற்பார்வையில் பள்ளி மைதானத்தில் இருப்பார்கள். இந்தச் செய்தி ஆபத்தானதாக இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் எங்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் சட்ட அமலாக்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இன்று திட்டமிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன,” என்று கூறப்பட்டுள்ளது.
இதே போன்று கடந்த மாதம் துவாரகாவில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளி, பஸ்சிம் விஹாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி, ஹவுஸ் காஸில் உள்ள மதர்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் லோதி எஸ்டேட்டில் உள்ள சர்தார் படேல் வித்யாலயா ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன. நீண்ட சோதனைக்குப் பின் அது புரளி எனத் தெரிய வந்தது. இந்த வழக்குகளில் ஒன்றில், டெல்லி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிக்கு மின்னஞ்சல்களை அனுப்பியதாகக் கூறப்படும் 12 வயது பள்ளி மாணவனை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் ஆலோசனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். இதே போன்று கடந்த ஜூலை மாதம் பெங்களூருவில் ஒரே நேரத்தில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.