
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை ரெய்டு நடவடிக்கைக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்க துறையினர் சோதனை என கூறப்படுகிறது.
இந்த சோதனை சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் ஐ.பெரியசாமி உறவினர்களுக்கு சொந்தமான வீடு, மில் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த சோதனைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், ”தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுகவின் மூத்தத் தலைவருமான ஐ.பெரியசாமி அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பாஜக அரசு செய்யும் சூழ்ச்சிதான் அமலாக்கத்துறை சோதனை. இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் சிதைக்கக் கூடியவை. அமலாக்கத்துறையினரின் இத்தகைய நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.